திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.58 திருச்சாத்தமங்கை பண் - பஞ்சமம் |
திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை
அருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே.
|
1 |
பொடிதனைப் பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே
கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை
அடிகள்நக் கன்பரவ அயவந்திய மர்ந்தவனே.
|
2 |
நூனலந் தங்குமார்பில் நுகர்நீறணிந் தேறதேறி
மானன நோக்கிதன்னோ டுடனாவது மாண்பதுவே
தானலங் கொண்டுமேகந் தவழும்பொழிற் சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்தஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.
|
3 |
மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபூசிப்
புற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழச் செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே.
|
4 |
வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேதகீதன்
பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவே
சந்தமா றங்கம்வேதந் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
அந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே.
|
5 |
தேவமாய் வேள்வியாகி விளங்கும் பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகந் நிலைதான்சொல்ல லாவதொன்றே
சாதியால் மிக்கசீரால் தகுவார்தொழுஞ் சாத்தமங்கை
ஆதியாய் நின்றபெம்மான் அயவந்திய மர்ந்தவனே.
|
6 |
இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசி
உமையையொர் பாகம்வைத்த நிலைதானுன்ன லாவதொன்றே
சமயமா றங்கம்வேதந் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கை
அமையவே றோங்குசீரான் அயவந்திய மர்ந்தவனே.
|
7 |
பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கை
அண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.
|
8 |
பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும் பெண்ணொர்பாகம்
ஈரெழிற் கோலமாகி யுடனாவதும் ஏற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு கனகம்மனை யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை அயவந்திய மர்ந்தவனே.
|
9 |
கங்கையோர் வார்சடைமேல் அடையப்புடை யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான் சொல்ல லாவதொன்றே
சங்கையில் லாமறையோர் அவர்தாந்தொழு சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தாய் அயவந்திய மர்ந்தவனே.
|
10 |
மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும்
முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |